தமிழகத்தில் இன்று காலை 234 தொகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,”தேர்தல் பணிக்காக உங்கள் வீட்டினருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் மற்றும் ஒரு கப் தேநீர் கொடுத்து உதவுங்கள். பெண் காவலர்கள் பணியில் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.