சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவில் வசித்து வருபவர் மிசிரியா (40). இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட்தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் மிசிரியா தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதனை அறிந்த அவரது நண்பரான பாஸ்கர் என்பவர் வாயிலாக வளசரவாக்கம், தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா (65) என்ற பெண் மிசிரியாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் சசிகலா எனக்கு பல அரசியல்வாதிகளை தெரியும்.
அவர்கள் வாயிலாக உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இதற்காக மிசிரியாவிடமிருந்து சசிகலா ஆன்லைன் வாயிலாக சிறுக சிறுக ரூபாய் 28 லட்சம் வரை பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து சசிகலா, மிசிரியாவின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது போல போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மிசிரியா, தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். மேலும் இந்த மோசடி தொடர்பாக திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.