முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலாறு-பொருந்தலாறு அணை அருகில் இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக வலையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் காந்தி என்பதும், சட்டவிரோதமாக அவர்கள் முயலை வேட்டையாட முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த வலைகளை பறிமுதல் செய்து தலா 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதன்பிறகு வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது என அவர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.