உக்ரைன் நாட்டின் போர் நெருக்கடியில் சிக்கியுள்ள தன் மகனை நினைத்து மன வேதனைக்கு உள்ளான தாய், திடீரென அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு என்ற பகுதிக்கு அருகேயுள்ள பத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கரன். இவரது மனைவி சசிகலா (வயது 53). இவர்களின் இரண்டாவது மகன் சக்திவேல் என்பவர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது ரஷ்ய உக்ரைன் போர் தீவிரத்தால் பல இடங்களில் ரஷ்யா குண்டுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சக்திவேல் அங்கு சிக்கி தவித்து வருவதை அறிந்த அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் சக்திவேலின் தாயார் ஏற்கனவே, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை அடுத்து தனது மகன் உக்ரைன் நாட்டில் சிக்கியிருப்பதை அறிந்த சசிகலா மிகவும் மனவேதனை அடைந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே, திடீரென மயங்கி விழுந்தார். அதன்பின் அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சசிகலா இறந்த தகவலானது அவரது மகன் சக்திவேலுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாயின் இறுதிச்சடங்குக்கு கூட நாடு திரும்ப முடியாத சூழ்நிலையால், சக்திவேல் அவரது தாயின் உடலை வீடியோ காலில் பார்த்து கதறி அழுதார். இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே மத்திய அரசு தயவுகூர்ந்து, சக்திவேலுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக அவரை உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.