ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பி.எப். சந்தாதாரர்களின் இ-நாமினேஷனுக்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகு நியமன வசதி கிடைக்கும் என்று இ.பி.எப்.ஓ. ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில், இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. முன்னதாக டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்னனு பரிந்துரையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பலரால் பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்களைச் சேர்க்க முடியவில்லை.
இ-நாமினேஷன் வசதி பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கும், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் மாற்றுவதன் ஒரு பகுதியாக இ-நாமினேஷன் அறிமுகப்படுத்தப்பட்டது.