பிரசித்தி பெற்ற கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம் உண்டியல் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்களை கொண்டு காணிக்கை எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. அதில் 1 கோடியே 22 லட்சத்து 83 ஆயிரத்து 57 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் 832 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 224 கிராம் வெள்ளியும் இருந்துள்ளது. இந்த காணிக்கைகளை கோவில் நிர்வாகம், மலைக்கோயில் தேவர் மண்டபத்தின் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா உள்ளிடோர் ஆய்வு செய்துள்ளனர்.