சென்னை பள்ளிக்கரணையில் வினோத்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், முகநூல் விளம்பரத்தில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்றும் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ரூ.1,00,000 கொடுத்தால் வேலை உறுதி என்று கூறினார்கள். அதன்படி அந்த நிறுவனத்தின் வங்கியில் ரூ.1,00,000 செலுத்தி நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன். ஆனால் அந்த வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திரும்ப தரவில்லை.
மேலும் என்னை போல இந்த வேலைக்கு 48 பேர் விண்ணப்பித்து 48 லட்சத்து இழந்துவிட்டோம். எனவே அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.