இலங்கை தமிழர்களுடன் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார்.
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை ஆதரிப்பது நமது கடமை ஆகும். ஏற்கனவே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் வழங்கப்பட்ட சலுகைகள் போன்று தற்போது தமிழகத்திற்கு வரும் மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து 39 குடும்பங்கள் வந்துள்ளனர்.
இந்த மக்களை மண்டபம் மற்றும் முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும், உணவுகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முகாம்களில் வசிக்கும் மக்களுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். அவர் இலங்கை தமிழர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் நலன் குறித்து கேட்டறிந்தார். இந்த உரையாடலின் போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் 19,223 இலங்கை தமிழர்கள் தமிழகத்தின் பல இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.