இலங்கையில் தற்போது நிலவி வரும் ஏரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்த நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜய் சேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேகர பொருளாதார நெருக்கடி தொடர்கின்ற நிலையில் எரிபொருட்களுக்கான கடன் வரியை இந்திய அரசாங்கம் வழங்கியமைக்காக பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, இலங்கையின் எரிபொருள் தேவைக்காக பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனவே எந்த நாடுகளும் எங்களுக்கு உதவ வந்தாலும் அதனை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் தற்போதைக்கு இந்திய அரசு மட்டும்தான் நமக்கு கடன் கொடுத்திருக்கின்றது. ரஷ்ய அரசாங்கத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். மேலும் இலங்கைக்கு எவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை அறிய நாங்கள் காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் இலங்கையில் தேசிய எரிபொருள் அனுமதி திட்டம் எனும் பெயரில் எரிபொருள் விநியோகத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். மக்களுக்கு புதிய பாஸ் அளிக்கப்பட்டு வாராந்திர அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்படும் ஒவ்வொரு தேசிய அடையாள அட்டை எண்ணிற்கும் க்யூ ஆர் குறியீடு பாஸ் வழங்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எரிபொருளை எடுத்துச் செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கின்றது.