இலங்கை நாட்டு அதிபர் கோத்தபய வெளிப்படையாக செயல்படவில்லை எனவும் மக்களின் போராட்டத்துக்கு தான் ஆதரவு தருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே கூறினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் கொழும்புவில் கடந்த 7 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகனும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்சே தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது “இலங்கை அரசின் மீது மக்கள் ஏன் ஆத்திரமாக இருக்கின்றனர் என்பது எனக்கு புரிகிறது. எனினும் தற்போது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் மட்டுமல்ல, அதற்கான தீர்வுகளையும் காணும் நேரம் வந்துள்ளது.
இலங்கை அதிபர் நாட்டின் திட்டங்கள் தொடர்பாக இன்னும் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். தங்கள் மீது மக்கள் வைக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாங்கள் அவர்களிடம் உண்மையை தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை. அவருடைய தற்போதைய அமைதி எவ்விதத்திலும் உதவவில்லை. அவர் நாட்டு மக்களிடம் தன் திட்டங்கள் தொடர்பாக எடுத்து கூற வேண்டும். அத்துடன் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக தெரிவித்திருக்க வேண்டும். இதனிடையில் மக்கள் போராட்டத்துக்கு நான் ஆதரவளிக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமை, ஆனால் அவர்களின் கோபம் பயனற்றது ஆகும்” என்று கூறினார்.