இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால் அங்குள்ள மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். நேற்று நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 பேர் படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளன. அவர்களை க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் 5 பேரை ராமேஸ்வரம் அருகிலுள்ள சேராங்கொட்டை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர்.
ஒரே நாளில் 5 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கூறும் போது இலங்கையில் வாழ முடியாத சூழல் நிலவுவதாகவும் இதனால் தமிழகத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பலர் அங்கிருந்து வர உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.