பெங்களுருவில் இருந்து இன்று தமிழகம் திரும்பிய சசிகலா, அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தெய்வ அருளாலும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியால் நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றேன்.
உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். புரட்சித்தலைவி அம்மா சொன்னது போல் எனக்கு பின்னாலும் இந்த அ.இ.அ.தி.மு.க இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அந்த நல்ல எண்ணத்தை தொடர என் வாழ்நாள் முழுவதும் கழகமே குடும்பம் குடும்பமாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கழக முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவியின் பிள்ளைகள் என்றும், எனக்கு பிள்ளைகள்தான். எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்து இருக்கிறது அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையாக கழகம் மீண்டு வந்திருக்கிறது. அதேபோல் புரட்சித்தலைவரின் பொன் மொழிக்கேற்ப புரட்சித்தலைவியின் வழிவந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக ஓரணியில் நின்று நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சி கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம், என்னுடைய குறிக்கோள்.
நம்முடைய அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்பது நம் புரட்சித்தலைவியின் எண்ணம், அதை காப்பது நமது கடமை. நம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் கட்டிக்காத்து, நம் புரட்சித்தலைவியின் வழியில் வெற்றி நடையுடன் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகள் சிதைந்து விடக்கூடாது என்று உங்களுக்கு எல்லாம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அ.இ.அ.தி.மு.க எனும் இந்த மாபெரும் இயக்கம் வளர ஏழை மக்களின் மனதில் என்றும் குடி கொண்டிருக்கும் இந்த இயக்கம் வாழையடி வாழையாக தழைத்தோங்க என் இறுதி மூச்சு உள்ளவரை இந்த இயக்கத்திற்காக என்று உழைப்பேன். அம்மாவின் அன்பு தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து, வரும் தேர்தலில் வெற்றிக்கனியை நமது புரட்சித்தலைவி அம்மாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும.
எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை புரட்சித்தலைவியின் ஆசி கொண்டு வெற்றி பெறுவோம். புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி நாமம் வாழ்க, வாழ்க அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க தமிழகம் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.