விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் சட்ட பேரவையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்..
அவர் பேசியதாவது,ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. விக்னேஷ் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அவரை உரிய முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்..
ஆனால் அவரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் தாக்கியதை அடுத்து தான் மரணமடைந்துள்ளார்.. சிபிசிஐடி வசம் உள்ள இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்போது தான் உரிய முறையில் விசாரணை நடக்கும் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ் வர மறுத்து போலீசாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். போலீஸ் விசாரணைக்கு அழைத்தபோது விக்னேஷ் என்பவர் வர மறுத்துள்ளார்..
விக்னேஷ் காலை உணவு சாப்பிட்ட பின் திடீரென வாந்தி, வலிப்பு வந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும்.. விக்னேஷ் மரணத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. புகாருக்குள்ளான காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. விக்னேஷ் உடன் இருந்த சுரேஷ்க்கு அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கப்படும். விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.