இறந்தவரின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவலன் தண்டா பகுதியில் தாவிரியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லட்சுமி திடீரென இறந்துவிட்டார். அதனால் லட்சுமியின் உறவினர்கள் அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸில் வைத்து கொண்டு மதியம் 1 மணிக்கு போகியன்தாண்டா என்ற இடத்தில் எரிப்பதற்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் பகுதியில் உடலை எரிக்க கூடாது. இதனால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என கூறி உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் தனியார் ஒருவரும் தனது நிலத்திற்கு அருகே சடலத்தை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த லட்சுமியின் உறவினர்கள் தேவலன்தண்டா பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற ஆம்புலன்சில் இருந்து உடலை இறக்கி நடுரோட்டில் வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து தேவலன்தண்டா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மயானம் ஒதுக்கி தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து லட்சுமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட போகியன்தண்டா பகுதிக்கு சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.