வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஈரோடு அடுத்துள்ள திரிவேணி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவர் சித்தோடு பகுதியில் சொந்தமாக பிவிசி குழாய் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தெய்வசிகாமணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தை வழக்கமாக அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், காலையில் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 2 மணிக்கு மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அதில், ஒருவர் இருசக்கர வானத்தை தயார் நிலையில் வைத்துக்கொள்ள மற்ற இருவரும் தெய்வசிகாமணியின் வாகனத்தின் அருகே சென்று புல்லட் வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து புல்லட் வாகனத்தில் உள்ள ஒயர்களை அறுத்துவிட்டு வாகனத்தை ஆன் செய்து இரண்டு பேரும் மற்றும் ஒரு வாகனத்தில் காத்திருந்த ஒருவரும் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தெய்வசிகாமணி தனது இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தொடர்பாக ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை உடைத்து திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.