தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாளிலிருந்து பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீது மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் உருவெடுத்து, அதே நேரத்தில் திமுகவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாஜக பதில் கொடுத்து வருகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது தமிழக முதல்வர் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக உரையாடினார். இதை வைத்து பாஜகவுடன் இணக்கமாக செல்ல திமுக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மணிவிழா கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் குறைந்த பட்ச சமரசத்தையும் திமுக வைத்துக் கொள்ளக்கூடாது என்று முதல் ஸ்டாலின் முன்னிலையில் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
அதன் பிறகு பேசிய ஸ்டாலின், பாஜகவுடன் எந்த தருணத்திலும் திமுக குறைந்தபட்சம் சமரசத்தை வைத்துக் கொள்ளாது என்ற உறுதியை திருமாளவனுக்கு அன்பு பரிசாக வழங்குவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் டெல்லிக்கு செல்கிறேன். காவடி தூக்கவா செல்கிறேன். கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன், கலைஞர் பிள்ளை நான் என ஆவேசமாக பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை முதலவர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சினை போன்ற பிரச்சனைகளை மனுவாக வழங்கினார். இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடி முன்பு முதல்வர் ஸ்டாலின் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேலி, கிண்டல் செய்து பேசி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லிக்கு செல்வது குனிந்து கும்பிட அல்ல என வீர வசனம் பேசிய தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்தபோது அவர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த போது நுனியில் தான் அமர்ந்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் வெளியில் வந்திருந்தாலும் விழுந்து விடுவார். பிரதமர் முன்பாக கீழே விழுந்து இருந்தால் நமக்கு அசிங்கம். அவ்வளவு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார். என்ன பயமோ? தெரியவில்லை என்று வேற லெவலுக்கு இறங்கி நக்கல் அடித்து இருப்பது தமிழக அரசியலில் தற்போது பேசி பொருளாக மாறி இருக்கிறது.