இரட்டை கொலை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவலர்கள் தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு, பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நேற்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கைதான 9 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு ரேவதியிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.