புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 20 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் பள்ளிகள் தொடங்கின. தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் மூடப்படக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. தமிழகத்திலும் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் கல்லூரிகளுக்கும் ஜனவரி 20 தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை மூடுவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று மாணவர்களுக்கான நேரடி பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.