பாலியல் கொடுமைக்கு ஆண்மை நீக்கம், டிக்டாக் தடை, ஹெல்மெட் கட்டாயம், சமஸ்கிருதம் ஆரிய மொழி தானே எனக் கேள்வி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை உட்பட பல தீர்ப்புகள், வழிகாட்டுதல் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவருக்கு இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி கிருபாகரன் வழக்கு விசாரணையின் போது கண் கலங்கினார். தலைமை நீதிபதியுடன் நீதிபதி கிருபாகரன் அமர்ந்து வழக்குகளை விசாரித்த போது, வழக்குகளுக்கு ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் அவரின் பணியை வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனால் கண் கலங்கிய கிருபாகரன் கடைசி நாளில் முதன் முறையாக தலைமை நீதிபதியுடன் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறி நன்றி தெரிவித்தார்.