மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அவ்வகையில் குழந்தை பிறந்த உடனே இறக்கும் நிகழ்ச்சிகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தாயின் வாழ்க்கையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான குழந்தை பிறந்த உடனேயே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பெண் ஊழியர் ஏற்கனவே பிரசவ கால விடுப்பில் இருந்தாலும் அந்த விடுப்பை வேறு விடுப்பாக மாற்றிக் கொண்டு குழந்தை இறந்த நாளிலிருந்து அறுபது நாட்கள் கூடுதலாக சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் பிரசவம் ஆனதிலிருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.