இன்றளவும் கழிவு நீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய துப்புரவு பணியாளர்களை தான் அனைவரும் நாடுகிறோம். கழிவு நீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கிறது.இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரையும் நியமிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனை மீறி தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவருக்கு மரணம் ஏற்பட்டால் அதற்கு வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு. அந்த நபரின் உயிரிழப்புக்கு உரிமையாளர் பதினைந்து லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஒருவேளை இந்த அறிவிப்பை மீறி ஒருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபர் நியமிக்கப்படுவது தெரிய வந்தால் 14420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.