வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கி இருக்கிறது. கேஓய்சி வாயிலாக வங்கிகணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி ஆகிய முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதனால்தான் தற்போது வங்கிகளில் மட்டுமல்லாது புதியதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது ஆகிய எந்தவொரு நிதிசார்ந்த விவகாரங்களுக்கும் KYCக்கான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.
வங்கிகளில் கேஓய்சி செய்முறையை பூர்த்திசெய்ய, பான்கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. கேஓய்சி சரிபார்க்கும் நடவடிக்கையின்படி பூர்த்திசெய்யப்பட்ட படிவத்துடன், மேற்கூறிய ஆவணங்களில் ஒன்றிணை இணைத்து, அதை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி (அல்லது) நிதிநிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரிஜினல் அடையாள அட்டையை நேரில் சரிபார்த்த பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றில் வங்கி, நிதிநிறுவனங்கள், முதலீடுகள் என ஒவ்வொற்றிற்கு தனித் தனி படிவங்கள், ஆவணங்களைக் கொண்ட கேஓய்சி-யைப் பூர்த்திசெய்வதற்கு பதில் சென்ட்ரல் கேஓய்சி (CKYC) எனும் திட்டம் ரிசர்வ்வங்கியால் (RBI) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய பங்குகள், பரிவர்த்தனை வாரியம் (SEBI), இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வாயிலாக கேஓய்சி ஆவணங்களை ஒரு முறை சரிபார்த்தாலே போதும். அதன்பின் சென்ட்ரல் KYC (cKYC) அனைத்து வாடிக்கையாளர் தகவல்களையும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அணுகக்கூடிய ஒரு மத்திய சேவையகத்தில் சேமித்துவைக்கும். அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எந்த ஒரு நிதிச் சேவையை தொடங்கவும் கேஓய்சி தாக்கல் செய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு பதில் சென்ட்ரல் கேஓய்சி செய்யப்பட்டதற்கான 14 இலக்க அடையாள எண்ணை வழங்கினாலே போதும். இந்த நிலையில் தனிநபர் குறிப்பிட்ட (அல்லது) பிறவங்கிகளில் எத்தனை கணக்குகளை வைத்துள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் பல வங்கிகளும் அறிந்துகொள்ள முடியும் என்பதால், சென்ட்ரல் கேஓய்சியின் நோக்கம் வாடிக்கையாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி மணி லாண்ட்ரிங்கை தடுப்பதற்காக கேஓய்சி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் ஒரேநபர் பல கணக்குகளை ஆரம்பித்து மோசடியில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிகேஓய்சி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. அதாவது ஒரேநபர் ஒன்றுக்கு மேற்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கு (அல்லது) சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற அதிக வட்டி, வரிச்சலுகைகளை தரக்கூடிய கணக்குகளை மூத்த குடிமக்களின் பெயரில் ஆரம்பித்து, நிதி மோசடியில் ஈடுபடுவதைக் கண்டுபிடிப்பதே சென்ட்ரல் கேஓய்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது. அத்துடன் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் ஒரே மாதிரியான கணக்குகளை திறக்க வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது முழு வங்கி அமைக்கும் இந்த தடை நடைமுறைபடுத்தப்பட்டு வாடிக்கையாளர்கள் நிறைய வங்கி கணக்குகளை திறப்பதை தடுக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.