கொரோனா சிகிச்சை மையம் திண்டுக்கல் புறநகர் பகுதியில் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செயல்பட்டு வருகிறது. இதுதவிர கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும், பழனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், புதிய சிகிச்சை மையம் அமைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சிவகுமார் கூறும்போது, 150 படுக்கை வசதி கொண்ட அரசு கொரோனா சிகிச்சை மையம் திண்டுக்கல் அருகே பள்ளபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வத்தலகுண்டு பைபாஸ் ரோட்டில் உள்ள தானிய கிடங்கில் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்றார்.