Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்…. ஆனால் இதை ஏன் செய்யல?….. கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்..!!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதலமைச்சர்வின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதை பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் முதல்வர் திரு மு க ஸ்டாலின் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன்.

இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். எனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். அதேபோல் மதுபானங்களால் ஏற்படும் போதையை ஒழிக்க தமிழக அரசு முன்வராதது ஏன்? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு டாஸ்மார்க் வருமானத்தை விட மனமில்லாததால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் .வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழி நடத்திச் செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |