தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சமுதாயத்தின் சம நண்பர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மாநில முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் நன்கு அறிந்துள்ளீர்கள். அதேபோல் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நான் உளமாற நம்புகிறேன் என்று கூறினார்.
மேலும் தற்போது நடக்கும் அரசை பொருத்தவரைக்கும் தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போல கருதுவதாகக் கூறினார். இன்று உலக அளவில் புவி வெப்பம் அடைதல் என்பது அதிகமாக பேசப்படும் விஷயமாகும். எனவே இதனை தடுக்க பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், சுற்றுச் சூழலை மனதில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சியாக இருக்கும் போதே மரக்கன்றுகள் எல்லாம் நட்டது உங்களுக்கு தெரியும். அதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்ததாகவும், மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நேர்மையான மற்றும் வெளிப்படையான அனுமதி முறைக்கு வித்திட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆகவே இப்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சி தலைவரோடு சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிற சூழலில் இன்றைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை 2020 பற்றிய பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் தொழில் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் சமுதாயத்தினுடைய சம நண்பர்கள் என்ற அளவில் அதனை முன்னெடுத்துச் செல்ல தேவையான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை, நீங்கள் அனைவரும் இங்கே வழங்கிட வேண்டும் என்றும் உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறி அவர் தனது உரையை முடித்துள்ளார்.