சென்னையில் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கண்ணகி நகரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 குழந்தைகள் உள்பட 337 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சி நிர்வாகங்கள், மருத்துவத் துறை சார்பாக வீடுகளில் தேவையில்லாத இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுவது, கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பு, அனைத்து துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் 7 ஆயிரத்து 707 இடங்களில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் தான் தேவையற்ற தேங்காய் ஓடுகள், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது அதிகமாக இருக்கிறது இவற்றை அகற்ற சென்னை கட்டட தொழிலாளர் சங்கம் வணிகர் நிர்வாகிகளுக்கு தெரிவிக்க உள்ளோம். மேலும் உள்ளாட்சி நிறுவனங்களின் சார்பில் அபராதம் விதிப்பது பற்றி தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்