மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பதவி வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்தினவேல் என 2 மகன்களும் உள்ளனர்.. இவர் திமுக மீது கொண்ட பற்று காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்..
மேலும் திமுக ஆட்சியின்போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி.என் பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4ஆவது வார்டு பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு இன்று 11 மணி அளவில் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்து உடல் மேல் ஊற்றி தீக்குளித்து அதே இடத்தில் உயிரிழந்தார்..
மேலும் தீ பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளை தாளில் வாசகம் எழுதியுள்ளார்.. அதில் மோடி அரசே! மத்திய அரசே! அவசரம் வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க, இந்தி கோமாளி எதற்கு.. இந்தி மாணவ மாணவிகளின் வாழ்க்கையை பாதிக்கும். இந்தி ஒழிக! இந்தி ஒழிக! என்று வாசகத்தை எழுதியுள்ளார்.. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.