மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‘ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவான சீன நிறுவன மொபைல் போன்கள் விற்பனைக்கு தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்டது.
இது குறித்து அவர் பேசியதாவது, அரசிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. இந்திய நிறுவனங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் காரணமாக, இந்திய பிராண்டுகள் விலக்கப்பட்டால், அரசு தலையிட்டு தீர்வு காணும். இந்தியாவை உலகளாவிய தளமாக தேர்வு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.வெளிநாட்டு பிராண்டுகளை இங்கிருந்து ஏற்றுமதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம். வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான, துடிப்பான மற்றும் புதுமையான ஒரு மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பு அமைவதே பிரதமரின் பார்வையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.