இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன.
59 செயலிகளை தடை:
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், யூசி ப்ரவுசர், ஹலோ உள்ளிட்ட சீன நாட்டின் 59 மொபைல் செயலிகளுக்கு அதிரடி தடை விதித்தது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இந்த செயலிகள் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான் தற்போது மத்திய அரசாங்கம் சீன நாட்டின் 59 செயலிகளின் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
79 கேள்விகள் கேட்டு நோட்டீஸ்:
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், இந்திய புலனாய்வு மற்றும் குளோபல் சைபர் கிரைம் கண்காணிப்பு அமைச்சகத்தின் மூலமாக இந்த செயலிகளின் நடவடிக்கை மற்றும் பின்னணி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே செயலிகளின் தோற்றம், அதன் நிறுவன அமைப்பு, அதற்கான நிதி, டேட்டா மேனேஜ்மெண்ட், நிறுவனத்திற்கான நடைமுறைகள், அதைப் பயன்படுத்தும் சர்வர் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக தெரிவிக்கவும்.
22ஆம் தேதி வரை கெடு:
வருகின்ற ஜூலை 22 ஆம் தேதிக்குள் செயலி குறித்து கேட்கப்பட்டுள்ள 79 கேள்விகளுக்கு நிறுவனம் பதிலளிக்க வேண்டும். அந்த பதிலில் முரண்பாடு இருக்கும் பட்சத்திலோ அல்லது பதிலளிக்கவில்லை என்றாலோ செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அனுப்பியுள்ளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரந்தரத்தடை:
சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்ததால் இந்தியாவிலும் இது சார்ந்து இருந்து வந்த நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு குறைந்துள்ளதாக பல தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதேபோல டிக் டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளும் இந்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைத்து நாங்கள் செயல்படுவோம் என்றும், நாட்டின் இறையாண்மையையும், நாட்டின் பாதுகாப்பையும் எந்த காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், செயலிகள் மூலமாக நாங்கள் எந்த தகவலையும் சீனாவுக்கு வழங்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தது.
டிக் டாக், ஹலோவுக்கு அனுமதி:
இதனை அடுத்து தான் மத்திய அரசு, தற்போது 79 கேள்விகளுக்கு விடை கேட்டு நோட் பிறப்பித்துள்ளது. ஒருவேளை முறையாக இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பட்சத்தில்…. இவைகள் மீண்டும் இந்தியாவில் இயங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே பலரும் கருதுகின்றனர். இது டிக் டாக், ஹலோ போன்ற பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையிலேயே இருக்கிறது. எனினும் நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை முக்கியம் என்பதால் அ மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றே நாம் எதிர்பார்க்கலாம்.