கேரளாவில் சமீப நாட்களாக வரதட்சணை கொடுமைகள் மற்றும் இதனால் ஏற்படும் மரணங்கள் தலைதூக்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வரதட்சனை கொடுமையால் 34 பேர் கொடூரமாக இறந்துள்ளனர். இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் வரதட்சனை மரணங்களை கட்டுப்படுத்த கேரள அரசு ஒரு வழிவகை செய்துள்ளது.
அதன்படி கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் வரதட்சணை தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வரதட்சனை வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதி மொழி பத்திரம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது
இதற்காக கோழிக்கோடு பல்கலைக்கழகம் 2021-22 ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர் பெற்றோர்களுக்கு படிவங்களை அனுப்பியுள்ளது அதை அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரதட்சனை கொடுக்க மாட்டேன் என எழுதி கையெழுத்திட்டு கொடுக்கும்படி தெரிவித்துள்ளது எதிர்காலத்தில் உறுதிமொழியை மீறுவோரின் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.