மருத்துவமனை அருகே கீழே விழும் நிலையில் இருந்த பழமையான மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வேரோடு வெட்டி அகற்றியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் பழமையான தூங்கு மூஞ்சி வாகை இன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு இந்த மரம் திடீரென பட்டு போனதால் மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெரும் விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் இருந்து வந்துள்ளது. எனவே இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் நெடுஞ்சாலை துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரனின் உத்தரவின்படி சாலை ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் பணியாளர்கள் அந்த மரத்தை வேரோடு அறுத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.