விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் போலிஸ் நிலையத்தின் எதிரே திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஐந்து நபர்கள் பட்டாசு வெடித்தனர். இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான்(55) அவர்களிடம் சென்று போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அங்கிருந்து உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒருவர் திடீரென பட்டாசு கொளுத்தி சப் இன்ஸ்பெக்டர் மீது வீசினார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் சுதாரித்துக் கொண்டு சற்று விலகி, அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் டார்ஜான் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதை பார்த்த பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், சஸ்-இன்ஸ்பெக்டர் புனித வெள்ளி மற்றும் போலீசார் ஆகியோர்கள் விரைந்து வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது 4 நபர்களை பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து பிடிபட்டவர்களை கைதுசெய்து அவர்களை விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் போது பிடிபட்ட அவர்களின் பெயர் ஆகாஷ்(19) ,விக்னேஷ்(27), சோமு(35),மற்றும் ஷானவாஸ் என்றும் தப்பி ஓடியவர் மகாத்மா ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிதரன்(25) என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.