தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராமிரெட்டிப்பட்டி கிராம பகுதியில் மக்களின் குடிநீர் சேவையை கிணறு ஒன்று பூர்த்தி செய்து வந்துள்ளது. நாளடைவில் அந்த கிணறு பயன்பாடு இல்லாமல் போனது. இந்த நிலையில் அதனை சிலர் மூடி மறைத்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த கிராம மக்கள் காணாமல் போன அந்த கிணற்றை மீட்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு இடையே கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பெயரில் இருந்தது தெரியவந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடம் என்ற காரணத்தினால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜம்பு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் தாரமங்கலம் ஜலகண்டாபுரம் சாலையில் மந்தை தோப்பூர் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அதிகாரிகள் முன்னிலையில் கிணறு மூடப்பட்ட இடத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு தோன்டியுள்ளனர். அங்கு வட்ட வடிவ கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிராம மக்களிடமும் கிணற்றை மூடிய நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.