ஆந்திர மாநிலத்தில் இப்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 13 மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார்.
அதன்பின் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின் தெலுங்கு வருட பிறப்பு நாளில் மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிக்கப்பட்டு இன்று (ஏப்ரல்.4) முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது. அவ்வாறு புதியதாக உதயமாகவுள்ள மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சித்தூர் 2ஆக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டம் இன்று முதல் செயல்பட இருக்கிறது.
அதனை தொடர்ந்து பாலாஜி மாவட்ட கலெக்டராக வெங்கட்ரமணா ரெட்டியும் போலீஸ் சூப்பிரண்டாக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனிடையில் புதிய கலெக்டர் அலுவலகம் திருச்சானூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள தமிழ்நாடு என்ற இடத்திலுள்ள பத்மாவதி ஆலயம் தற்காலிக கலெக்டர் அலுவலகமாக இயங்குகிறது. இதில் பாலாஜி மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருப்பதி, காளஹஸ்தி, கூடூர் சூலூர்பேட்டை வருவாய் கோட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன.