மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பாமணி பகுதியை சேர்ந்த காளிதாஸ், மகேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மன்னார்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோட்டார் சைக்கிளை திருடிய காளிதாஸ், மகேஸ்வரன் ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.