வி.கே.சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “தி.மு.க அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத அடிப்படையில் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தினசரி தி.மு.க அரசு தாங்க முடியாத சுமைகளை மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருக்கிறது. ஆகவே இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தி.மு.க அரசு சென்ற மார்ச் மாதம்தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் ஆகிய ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி இருந்தது. அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு 30ரூ வரையிலும், பால் பவுடர் 1 கிலோ 40ரூ, பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100 ரூ, தயிர் லிட்டருக்கு 6ரூ என்ற அளவுக்கு கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இப்போது நெய் லிட்டருக்கு 45ரூ, தயிர் லிட்டருக்கு 10 -20ரூ வரையிலும், லஸ்ஸி 200 மி.லி. 2 -3ரூ வரையிலும் மீண்டும் உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது GST கவுன்சில் கூட்டத்தில் உணவுப்பொருட்களுக்கு 5 % ஜிஎஸ்டி வரிவிதித்து இருப்பதை காரணமாக காட்டி திமுக அரசு அதனைவிட அதிகமாக 8.5 % அளவுக்கு ஆவினில் நெய்யின் விலையை உயர்த்தி இருப்பது பகல் கொள்ளையாக தெரிகிறது. தி.மு.க அரசு இதுபோன்று 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆவின் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி வந்தால், ஆவின் நிறுவனத்தை மக்கள் புறக்கணிக்கின்ற நிலை ஏற்பட்டுவிடும். அத்துடன் இதுபோன்ற நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசே உதவுவதாக அமைந்து விடும்.
இதற்காகவா மக்கள் தி.மு.க-வுக்கு ஓட்டுபோட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது. அதேபோல் மத்திய அரசும் உணவுப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். முன்பே விலைவாசி உயர்வு, கொரோனா ஆகிய பிரச்னைகளால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிற சூழ்நிலையில், உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படவில்லை எனில் மக்களால் புறக்கணிக்கப்படுகிற காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே திமுக அரசு ஆவின்பொருட்களின் விலை ஏற்றத்தை உடனே திரும்பபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.