ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சமரச பேசியபோது, திமுக தேர்தல் அறிக்கையின் படி ஆவின் பால் விலை குறைக்கப்படும் என உறுதி அளித்தபடி பதவியேற்ற நாள் முதலே ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதலமைச்சர் குறைத்துள்ளார். மேலும் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடையில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பால் உற்பத்தி பொருட்கள் ரூ.82.11 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 44 மடங்கு அதிகமாகும். தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயன் அடையும் வகையில் தமிழக அரசின் 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.122 கோடி மதிப்புள்ள ஆவின் நெய் வினியோகம் செய்யப்பட்டது.மேலும் 2020-21-ம் நிதி ஆண்டில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் 11.67 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 2021-22-ம் நிதியாண்டில் 13.5 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் 2021-22-ம் நிதி ஆண்டில் 13.6 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்துள்ளது. இதை வரும் ஆண்டில் 15 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆவின் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சேலம் ஒன்றியத்தில் பதப்படுத்தப்பட்ட பால் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதிக்கு ஈரோடு மாவட்டத்தில் உரிமம் வழங்கப் பட்டிருக்கிறது. மொரசிஸ், மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. பால் உற்பத்தியாளர்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.
மேலும் கூட்டுறவு இல்லாத கிராமங்களை கண்டறிந்து கூட்டுறவு பால் உற்பத்தி செய்ய வரைமுறை செய்யப்படும். மொத்த பால் கொள்முதல் விலை 25 சதவீதமாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும், எனவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உற்பத்தி உடைய பால்பண்ணை 71.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.