ஆவணி மாத பூஜை மற்றும் மலையாள புத்தாண்டை முன்னிட்டு தந்திரி கண்டரரு ராஜிவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்தார். இதனை அடுத்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மலையாள புத்தாண்டை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். வருகிற 21-ஆம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை கலசபிஷேகம், அஷ்டாபிஷேகம், கலபாபிஷேகம் நடைபெறும்.
21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் நடை திருவோண பண்டிகைக்காக வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி திறக்கப்படும். பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் கீழ் சாந்தி நியமனத்திற்காக குழுக்கல் நடைபெற்று புதிய கீழ் சாந்தியாக வி.என் ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான கமிஷனர் வி.எஸ் பிரகாஷ், தலைவர் அனந்தகோபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.