சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பெ. அமுதா விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தீனதயாள உபாத்தியாய ஊரகத்திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நேரம் நடவடிக்கைகள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன் இணைப்புகள், சுழல் நீதி இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் பற்றியும், முதல்வரின் காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களில் சுய உதவி குழு மகளிர் பங்களிப்பு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அடைய வேண்டிய இலக்குகள் பற்றியும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை பற்றியும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது,
1. அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் விதமாக செயல்பட வேண்டும்.
2 . சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 2,500 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும்.
3. தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும்.
4. சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
4. திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடித்திட அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
6. நலிவுற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் போன்றோர்களை உள்ளடக்கிய சுய உதவி குழுக்களை அமைத்திட அதிக அக்கறை காட்டிட வேண்டும்.
7. வங்கி கடன் இணைப்பு பெற்று தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும்.