அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி இரத்த உறைவு பிரச்சினை ஏற்படுத்துவதால் டென்மார்க் அதனை தடைசெய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டென்மார்க்கிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுவதாக கூறி டென்மார்க் அதனை தடை செய்துள்ளது.
இதனிடையே ஐரோப்பிய மருந்து கண்காணிப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனைகளை ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்ததாக கூறியுள்ளது. ஆனால் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை ஒப்பிடும்போது தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் காணப்படுவதால் அதனை பயன்படுத்துவது அந்தந்த நாடுகளின் விருப்பம் என தெரிவித்திருந்தது.
இதுகுறித்து டென்மார்க் சுகாதார நிறுவனத்தின் தலைவர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் கூறுகையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் தீவிர ரத்த உறைவு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது தெரிகிறது. எனவே டென்மார்க் அதை தடை செய்துள்ளது என்றும் அனைத்து மக்களுக்கும் அஸ்ட்ராஜெனேகா செலுத்தாமல் மற்றொரு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனி 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பிரான்ஸ் 55 வயதுகுட்பட்டவர்களுக்கும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது.