ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய பின் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பின் ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று(மார்ச்.23) பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப இருக்கின்றனர். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இதையடுத்து 2 மாதங்களுக்குப் பின் சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்று தலைநகர் காபூல் உட்பட பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் கல்வி அமைச்சகம் கூறியிருப்பதாவது, சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சியடைய செய்வதற்காக நாங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை. ஏனெனில் எங்கள் மாணவிகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்காகவே நாங்கள் இதனைச் செய்கிறோம். இதில் 12 முதல் 19 வயது வரையிலான பெண்களுக்கான பள்ளிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.