மீன்பிடிக்க சென்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் தவசிமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் தவசிமணி கரை திரும்பாததால் மீனவர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது புதுப்பட்டினம் பகுதிக்கு நேராக 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆட்கள் யாரும் இல்லாமல் ஒரு படகு மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்ததும் மீனவர்கள் அந்த படகினை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த படகு தவசிமணிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் புதுக்குடி அருகே கடல் பகுதியில் தவசிமணியின் சடலம் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தவசிமணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.