இரண்டாவது திருமணம் மூலம் 3 வது குழந்தைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் உமாதேவி. இவர் மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதனை எதிர்த்து உமாதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் தான் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்ட நிலையில், அவர் மூலமாக இரு குழந்தைகள் பிறந்ததாகவும், விவாகரத்துக்கு பின் இரு குழந்தைகளும் முதல் கணவரிடம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பின் ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்துள்ள நிலையில் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும், எனவும் ஏற்கனவே இரு குழந்தைகள் அரசு பணியில் சேரும் முன் பிறந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் மகப்பேறு பலன்களை பெறுவதற்கான குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்த கட்டுப்பாடும் விதிக்காத வரையில் வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைகளுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என உத்தரவிட்டு மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறை அளிக்க உத்தரவிட்டு இருக்கிறார்.
மேலும் தாய்மையின் முக்கியத்துவம் மற்றும் ஆழமான புரிதலும் புதிதாக பிறந்த குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.