இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியின் பேட்டிங் பார்ம் இப்போது அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் சென்ற 2019 ஆம் வருடம் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது சதமடித்த விராட்கோலி, கடந்த 3 வருடங்களாகவே சதம் அடிக்காமல் திணறிவருகிறார். மேலும் அண்மையில் நடந்துமுடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக்கூடிய ஒரு தொடராக மாறி இருக்கிறது. இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த தொடர் முடிந்ததும் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு மீண்டுமாக ஆசிய கோப்பையின்போது அணிக்கு திரும்பவார் என கூறப்பட்டுள்ளது. விராட்கோலியின் மீது ஏற்பட்டு இருக்கும் இந்த விமர்சனம் தொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது “ஆஸ்திரேலியா மண்ணில் இந்த வருடம் இறுதியில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறயிருப்பதால் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் எதிர் வரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம் ஆகும். எந்த அளவுக்கு அதிக போட்டிகளில் அவர்களைப் போன்ற வீரர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவருக்கு தன்னம்பிக்கையும், பார்மும் திரும்ப கிடைக்கும். ஆகவே என்னை பொறுத்தவரையிலும் விராட்கோலி தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவரை இந்த வெஸ்ட் இண்டீஸ்தொடரில் விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு ஆகும். எப்போதுமே ஒருவீரர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகமான போட்டிகளை வழங்க வேண்டும்.
ஏனென்றால் அதிகமான போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் மைதானத்தில் நின்று விளையாட முயற்சிப்பார்கள். இதனால் மீண்டுமாக அவர்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் திரும்பகிடைக்கும். விராட்கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவரும் பந்தை எட்ஜ் செய்து அடிக்கடி அவுட்டாகி வருகிறார். 2003-2004 ஆம் வருடம் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது சச்சின் டெண்டுல்கர் இதேபோன்று வெளியேறினார். ஆகவே அந்த திசையில் ரன் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்த சச்சின் அத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் விளையாடாமல் 241 ரன்கள் எடுத்து பார்முக்கு திரும்பினார். விராட்கோலிக்கும் அதேபோன்று செய்யும் திறன் இருக்கிறது. எனவே அவர் அப்பகுதியில் அதிகமாக உழைத்து திறம்பட விளையாட வேண்டுமென்று” அவர் கூறினார்.