இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவி வரும் மோசமான அரசியல் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அலி சப்ரி உட்பட நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி பதவிப்பிரமானம் செய்த 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த கையோடு அவர் அளித்த பேட்டியில், தற்காலிகமாகத்தான் தான் பதவியில் பொறுப்பேற்றதாகவும் நிலைமையை சீராக்க விரும்பினால் வேறு யாரை வேண்டுமானாலும் நிதியமைச்சர் பதவியில் பிரதமர் நியமிக்கலாம் எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொள்ளாததால் இன்று வரை அலி சப்ரி தான் இலங்கையில் நிதியமைச்சராக பதவியை வகிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.