தமிழில் ரோஜா திரைப்படத்தின் வாயிலாக அரவிந்த்சாமி நாயகனாக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பம்பாய், மின்சார கனவு ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபலமான இவர், சில ஆண்டுகளாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன்பின் மணிரத்தினத்தின் கடல் திரைப்படம் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இவர் நடிப்பில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், கள்ளபார்ட் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.
இத்திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து இப்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்திருக்கும் “ரெண்டகம்” படத்தின் ரிலீஸ் தேதியானது அறிவிக்கப்பட்டு உள்ளது. மலையாளம் நடிகரான குஞ்சாக்கோபோபன் “ரெண்டகம்” எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிப்படமாக வெளியாக இருக்கிறது.
அத்துடன் மலையாளத்தில் “ஒட்டு” என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் அரவிந்த் சாமி, ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர். பெலினி டிபி இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான “தி ஷோ பீப்பிள்” நிறுவனம் தயாரித்து உள்ளது. இத்திரைப்படத்தை கேரளா, கோவா, மங்களூர், மும்பை மற்றும் புனே போன்ற இடங்களில் படமாக்கி இருக்கின்றனர். இந்நிலையில் “ரெண்டகம்” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவானது அறிவித்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.