திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியே தினசரி காலை 7:15 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை இந்த பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில்தான் மலைத் தோட்டங்களுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணம் மேற்கோள்கின்றனர். இதன் காரணமாக இந்த பேருந்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இதற்கிடையில் தடியன் குடிசையிலிருந்து கருப்புசாமி கோயில் போகும் சாலை வரையிலும் ஆபத்தான 13 கொண்டைஊசி வளைவுகள் இருக்கிறது. இந்த மலைப் பாதையில் அனுபவம் மிகுந்த டிரைவர்களால் மட்டுமே பாதுகாப்பாக பேருந்தை இயக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் கூட்டம் அதிகரிக்கும்போது டிரைவர் இருக்கையின் அருகிலும், அவரை சுற்றிலும் பயணிகள் அமர்ந்தும், படிக்கட்டில் தொங்கியபடியும் இந்த பேருந்தின் பயணிப்பது வாடிக்கையாக இருக்கிறது.
இதன்படி நேற்றும் பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். அத்துடன் அந்த பேருந்து ஓட்டை உடைசலாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் காலை, மாலை வேளைகளில் அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.