Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் திடீர் ஆய்வு…. 7ஆம் வகுப்பு மாணவனின் பாரதியார் ஓவியம்…. பேனா பரிசளித்த ஆட்சியர்….!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது  பாரதியார்  ஓவியத்தை சிறப்பாக வரைந்த மாணவருக்கு பரிசளித்து பாராட்டியுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரை பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, சமையலறை, குடிநீர் மற்றும் மின்சார வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் உரையாடியுள்ளார். அங்கு ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் சிலர் தங்களின் நோட்டுப் புத்தகங்களில் ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தனர். அந்த ஓவியங்களை மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தனர். அதை பார்த்த கலெக்டர் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதில் மாணவர் சென்னகிருஷ்ணன் பாரதியார் ஓவியத்தை சிறப்பாக வரைந்திருந்தார். அந்த மாணவருக்கு மாவட்ட கலெக்டர் பேனா பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டுமென்று ஆசிரியர்களுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியருடன்  ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் தண்டபாணி உடன் இருந்துள்ளார். அதேபோல் மாரிகுண்டு ஊராட்சிக்குட்பட்ட எம் . சுப்புலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாட்டையும் திருமலாபுரம், அக்கரைப்பட்டி, மாரிகுண்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் இயங்கி வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |