இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்தத் தொகை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அது 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த வரிசையில் ஒடிசா மாநில அரசு அகவிலைப்படி உயர்வை தற்போது அறிவித்துள்ளது.
அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி 37 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 7.5 ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படி நிலுவைத் தொகையில் 30 சதவீதத்தை வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.