தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி. எனப்படும் விடுமுறை சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “விமான டிக்கெட்டுகளை மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அதே சமயத்தில் அவற்றின் விலை குறைவாகத்தான் இருக்கும். இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நிறுவனங்கள் வாயிலாக இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற நிறுவனங்கள் மூலம் டிக்கெட் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பயண நேரத்தில் 72 மணி நேரத்துக்குள்ளாக வாங்கப்படும் டிக்கெட் மற்றும் பயண நேரத்திற்கு 24 மணி நேரத்திற்குள்ளாக டிக்கெட் ரத்து செய்வதற்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப் படுவதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. பயணத்தை அதற்கேற்ற வகையில் வகுத்து கொள்ள வேண்டும். அரசு அங்கீகரித்துள்ள டிராவல் ஏஜென்ட் நிறுவனங்களுக்கான நிலுவை தொகைகளை அனைத்து அமைச்சகங்கள், துறைகள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.